நெல்லையில் வேகமாய் பரவும் வைரஸ் காய்ச்சல்
நெல்லை: தொடர் மழையால் தேங்கி கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள், வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியில்லை.
தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசுக்கள் மூலம் காய்ச்சல், சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட மழை கால நோய்கள் வேகமாக பரவுகின்றன. மேலும் தாமிரபரணி ஆற்றில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தண்ணீர் கலந்ததால் அந்த தண்ணீர் மாசுபட்டுள்ளது. அந்த தண்ணீரை அப்படியே குடிக்கும் போது நோய் எளிதாக பரவுகிறது.
தொடர் மழை எதிரோலியாக நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் காயச்சல் வேகமாக பரவுவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளி்ன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் அமர்வதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் சோர்வு, தொடர் தலைவலி, மூட்டு வலி ஆகியவற்றால் சிரமப்படுகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.