இந்திய டிரைவரை தாக்கிய ஆஸி நபர்-6 ஆண்டு சிறை
மெல்போர்ன்: இந்திய டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ஆஸ்திரேலிய நபருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குல் சம்பவத்திற்குப் பின்னர்தான் நூற்றுக்கணக்கான இந்திய டாக்சி டிரைவர்களும், தொடர்ந்து இந்திய மாணவர்களும் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகத் தொடங்கினர் என்பது நினைவிருக்கலாம்.
ஜல்விந்தர் சிங் என்ற டாக்சி டிரைவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மெல்போர்ன் நகரில், பாரிஸ் சேல்ஸ் என்ற ஆஸ்திரேலியரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேல்ஸ், பின்னால் இருந்தபடி கத்தியால், ஜல்விந்தர் சிங்கை ஐந்து முறை குத்தினார். இதனால் ரத்தம் கொட்ட கொட்ட துடிதுடித்தார் சிங். பின்னர் சேல்ஸ் இறங்கி ஓடி விட்டார்.
காரில் மயங்கிய நிலையில் கிடந்த சிங்கை, இன்னொரு டாக்சி டிரைவர் பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேல்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மெல்போர்ன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எலிசபெத், சேல்ஸுக்கு ஆறரை ஆண்டு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். திட்டமிட்டு இந்தத் தாக்குதலை சேல்ஸ் மேற்கொண்டுள்ளார். குத்தப்பட்ட சிங், சேல்ஸைக் கோபப்டுத்தும் வகையில் எதையும் சொல்லவில்லை, செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.