கொசுவை ஒழிக்க நல்ல மருந்து மண்ணெண்ணை- பிரபலமாகும் புதிய முறை
சென்னை: கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்க தேங்கிக் கிடக்கும் நீரில் சில துளி மண்ணெண்ணையை ஊற்றும் புதிய முறை மக்களிடையே பிரபலமாகியுள்ளது.
தமிழக மக்களிடம் உங்களது முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது கொசுத் தொல்லையாக இருக்கும்.
அந்த அளவுக்கு தமிழகத்தில் கொசுத் தொல்லை வெகு பிரபலம். தமிழகம் என்றில்லை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தத் தொல்லைக்கு முடிவே இல்லை.
கொசுக்களால் பரவும் வியாதிகளின் பட்டியல் மிக நீளமானது. சிக்குன்குனியா, டெங்கு என அபாயகரமான காய்ச்சல்கள் கொசுக்களால்தான் பரவுகிறது.
கொசுக்களை ஒழிக்க நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபடிதான் உள்ளன. ஆனாலும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை.
இந்த நிலையில் புதிய முறை ஒன்று மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில்தான் கொசுக்கள் பெருமளவில் முட்டை போட்டு பல்கிப் பெருகும். இப்படிப்பட்ட தண்ணீர் தேங்கிய இடங்களி்ல் மண்ணெண்ணையை தெளித்தால் கொசு முட்டைகள் அழிந்து போய் விடுகிறதாம்.
இதனால் அங்கு மீண்டும் கொசுக்கள் முட்டை போடுவதில்லை என்று கூறப்படுகிறது. இதை செய்து பார்த்த பலரும் பலன் கிடைப்பதாக கூறுவதால் இந்த புதிய முறை பிரபலமாகி வருகிறது.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போவதாக பலனடைந்த மக்கள் கூறுகின்றனர்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்...!