தீவிரவாதி ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமா யுஎஸ்?
டெல்லி: பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் ராணுவப் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெல்லி மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரவுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்டது இந்த என்ஐஏ (National investigation agency). மாநில அரசுகளின் அனுமதியைப் பெறாமலேயே நாட்டின் எந்தப் பகுதியிலும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்ற இந்த அமைப்பின் செயல்பாடுகள் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இதன் சிறப்பு இயக்குனராக ராதா வினோத் ராஜு உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லியை விசாரிக்கச் சென்ற ஐபி-ரா உளவுப் பிரிவு அதிகாரிகளின் குழு, அமெரிக்க அரசின் அனுமதி கிடைக்காததால வெறும் கையுடன் திரும்பி வந்துள்ளது.
இந் நிலையில் ஹெட்லி மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹெட்லிக்கும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர என்ஐஏ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை-வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை, எப்பிஐ ஆகியவற்றுடன் பேச்சு நடத்தவுள்ளன.
ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரிக்க வரும் 18ம் தேதி ராபர்ட் முல்லர் தலைமையிலான எப்பிஐ குழு இந்தியா வரும்போது அவர்களிடம் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை வைக்கவுள்ளது.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏதும் இல்லை என்பதால் ஹெட்லியை மத்திய அரசிடம் அமெரிக்கா ஒப்படைக்க முன் வருமா என்பது சந்தேகமே.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெட்லி மற்றும் அவரது கனடா நாட்டு கூட்டாளி ராணாவின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர்களுக்கும் இந்தியாவில் நடந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடப்பதற்கு முன் பலமுறை ஹெட்லி அங்கு வந்து சென்றுள்ளார். தாக்குதலுக்குப் பிறகும் ஒருமுறை வந்து சென்றுள்ளார் என்றார்.
5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை:
இந் நிலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெட்லி மற்றும் ராணா இருவரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் இணைந்து இந்தத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்த 100 தீவிரரவாதிகள் ஊடுருவியுள்ளகாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதால் 5 மாநிலங்களிலும் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹெட்லியை சந்தித்த மகேஷ் பட் மகன்:
இந் நிலையில் ஹெட்லியை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட் சந்தித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடத்தியுள்ளது ஐ.பி. ஆனால், ஹெட்லியின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்து ராகுலுக்கு ஏதும் தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.
ஹெட்லியின் இ-மெயில்களில் ராகுல் என்ற பெயரும் இருந்ததால் அது யார் என்று பெரும் பரபரப்பு எழுந்தது. இந் நிலையில் அந்த ராகுல் மகேஷ் பட்டின் மகன் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications