தமிழக மீனவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டிய இலங்கை கடற்படையினர்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என இலங்கை கடற்படை காடையர்கள் மிரட்டியதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது.
அதில், நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் இலங்கைக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன்பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். மீறி வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் எச்சரித்தனர்.
இதையடுத்து நாங்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினோம். அப்போது இரு படகுகள் மோதிக் கொண்டதில் அவை சேதமடைந்தன என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்டு வரும் அக்கிரம நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டக் கோரி நவம்பர் 17ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி பேரணி நடத்தப் போவதாக தமிழ்நாடு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீனவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த உடனடியாக இலங்கை அரசுடன் பேசுமாறு வலியுறுத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications