அதிகாரியின் 'பேப்பர் வெயிட்' தாக்குதல்!-அதிர்ச்சியில் போலீசார்
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரரை உயரதிகாரி பேப்பர் வெயிட்டால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி காவல் துறையில் உயரதிகாரியாக பணிபுரியும் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடி டவுனில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரை பேப்பர் வெயிட்டால் தாக்கினார். மீண்டும் இதேபோல் மற்றொரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீஸ்காரர்களையும் சமீபத்தில் பேப்பர் வெயிட்டால் தாக்கியுள்ளார். இதனால், தூத்துக்குடி காவல் துறையில் 'பேப்பர் வெயிட்' உயரதிகாரி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் லாரியில் இரும்பு கடத்தியது தொடர்பாக, 4 பேரை தென்பாகம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை மறுநாள் காலையில் வந்து விசாரிப்பதாகவும், அதுவரை வெளியே அனுப்ப வேண்டாம் என்றும், 'பேப்பர் வெயிட்' உயரதிகாரி கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை 10 மணியளவில் அவர் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த 4 பேரும் இல்லை. காவல் நிலைய வாசலில் இருந்த முடிவைத்தானேந்தலை சேர்ந்த சுப்பையா என்ற பாரா காவலரிடம் இதுகுறித்து விசாரித்தார்.
காவலர் தனக்கு தெரியாது என கூறியதால் டென்சனான உயர் அதிகாரி அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து சுப்பையாவின் மீது ஓங்கி எறிந்துள்ளார். இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இந்த தொடர் பேப்பர் வெயிட் தாக்குதல்களால் தூத்துக்குடி நகர காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.