நீலகிரி சேதத்துக்கு லஞ்ச-ஊழலே காரணம்-விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது. உண்ண உணவின்றி, கையில் பணமுமின்றி அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடுகின்றனர்.
ஊட்டி மலைப் பகுதி பெருமழையால் துண்டிக்கப்பட்டு இத்தனை நாட்களாகியும் அரசின் சார்பில் அரசு அதிகாரிகள் யாரும் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்றும் நிவாரண உதவிகள் வழங்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தேமுதிக கட்சி தொண்டர்களுமே மக்களைச் சென்றடைந்துள்ளனர். தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
குடிப்பதற்குச் சரியான தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்றும் வெறும் ரூ.2,000 மட்டும் தந்து விட்டு அரசு பின் வாங்கிக் கொள்வதை ஏற்க முடியாதென்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான இடங்களை ஒதுக்கி அதில் வீடு கட்டிக் கொள்ள புவியியல் அடிப்படையில் ஆய்வு செய்து அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு நிதியுதவி செய்ய வேண்டுமென்றும் கோருகின்றனர்.
அங்குள்ள ராலி அணை நிரம்பியுள்ளது. அதன் நீர்க்கசிவு நிலத்தடி நீராக வந்து வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கும் என்று பயப்படுகின்றனர். அந்த நீரை உரிய முறையில் வெளியேற்றி அணையை அரசு கண்காணிக்க வேண்டும்.
என்று நீலகிரி மாவட்டம் இத்தகைய பேரழிவுக்கு ஆளாகியதோ அன்றைய தினமே அப்பகுதியை ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் உடனே சென்றடைந்திருக்க முடியும்.
மேலும் அடிப்படை வசதி இன்றியும், இடிபாடுகளில் சிக்கியும் இழந்த உயிர்ச் சேதங்களைத் தடுத்திருக்க முடியும்.
இது மத்திய அமைச்சர் ராசாவின் தொகுதியாக இருந்தும் பெயரளவுக்கு இரண்டு மாநில அமைச்சர்கள் மட்டுமே சென்று உடனே சென்னை திரும்பி விட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து மக்களையும் உடைமைகளையும் காப்பாற்றவில்லை.
காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் கற்பாறைகளை உடைத்தும் கண்ட இடங்களில் எல்லாம் சட்டத்துக்குப் புறம்பாக குடியிருப்புக்கள் அமையக் காரணம் அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தாண்டவமாடும் லஞ்சமும் ஊழலும்தான்.
இதற்கு முற்றுப்புள்ளி இனியாவது நீலகிரி மாவட்டத்தைக் காப்பாற்ற நேர்மையான முறையில் அரசு செயல்படுமா என்பதுதான் இன்றுள்ள பெரிய கேள்வி.
''போற்றுபவர் போற்றட்டும், தூற்றுபவர் தூற்றட்டும்'' என்று கவிஞர் கண்ணதாசன் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே ஒரு அரசு இருந்து விடக் கூடாது.
அரசுத் துறைகளில் தாண்டவமாடும் ஊழல், மக்களின் உயிர்களுக்கே உலை வைக்கிறது என்பதைத்தான் இன்று இயற்கையும் நமக்கும் சுட்டிக் காட்டுகிறது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லதாக இருக்கட்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications