ஹெட்லி-விசாரிக்க யு.எஸ். விரையும் மும்பை போலீஸ்
மும்பை: இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் திட்டத்தை நடத்த சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்த மேலும் தகவல்களை விசாரிக்க மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போலீஸ் குழுவைச் சேர்ந்த தனிப்படை அதிகாரிகள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
மும்பையில் நடந்த பெரும் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பு ஹெட்லி மும்பைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மும்பைத் தாக்குதலில் ஹெட்லிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து ஹெட்லியின் மும்பை உள்ளிட்ட இந்திய பயணங்கள் குறித்து விசாரிக்க மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் போலீஸ் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அமெரிக்கா செல்லவுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் தரப்பில் கூறுகையில், ஹெட்லிடின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனியாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அமெரிக்கா செல்ல வேண்டியது அவசியமாகும். அங்கு சென்று எப்பிஐ அதிகாரிகளைச் சந்தித்து ஹெட்லி குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஹெட்லிக்குத் தொடர்பு இருந்தால் அதுதொடர்பான உறுதியான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். எனவே விரைவில் இதுதொடர்பாக மும்பையிலிருந்து ஒரு குழு அமெரிக்கா செல்லும் என்றனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் எப்பிஐ போல இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) ஹெட்லி மற்றும் அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தவார் ஹூசேன் ராணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து்ளது. மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து என்ஐஏ விசாரிக்கவுள்ளது.
ஹெட்லியை விசாரிக்க ஐபி-ரா குழு அமெரிக்கா சென்று விசாரிக்க அனுமதி கிடைக்காததால் திரும்பி வந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் மும்பை போலீஸ் குழு செல்வது நினைவுகூறத்தக்கது.