இலங்கை மீனவர்களுடன் பேச்சு- தமிழக மீனவர்கள் கோரிக்கை
மதுரை: இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்களுடன் மீன் பிடி உரிமை மற்றும் தொடர்ந்து நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து நாங்கள் பேசித் தீர்வு காண்கிறோம் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மோசமான முறையில் தாக்கி வருகின்றனர்.
இதை தடுக்கவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ ஒருமுறை கூட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசும், இந்த விவகாரத்தை மத்திய அரசுடன் கூறுவதோடு நின்று விடுகிறது. அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
இப்படி இரு அரசுகளும் மெளனிகளாக இருப்பதால், அனாதைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். கேட்பாரற்ற நிலையில் இருக்கும் மீனவர்கள் தற்போது மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்களின் உரிமைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் கவுன்சில் தலைவர் அருளானந்தம் கூறுகையில், இரு நாட்டு மீனவர்களையும் சந்தித்துப் பேச வைக்க மத்திய அரசு, மாநில அரசு, இலங்கை அரசு உதவ வேண்டும்.
இப்படி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டால் இரு நாட்டு மீனவர்களும், அவர்களின் மீன் பிடி உரிமைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். அமைதியாகவும், இணக்கமாகவும் எப்படி மீன் பிடி தொழிலை நடத்துவது என்பதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். இதுவே தீர்வுக்கு ஒரே வழி.
ஆண்டுதோறும் ஏராளமான தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்து சித்திரவதை செய்கிறது, அடித்து உதைக்கிறது, சுட்டும் கொல்கிறதது. அதேபோல இந்திய கடலோரக் காவல் படையும், கணிசமான அளவிலான இலங்கை மீனவர்களை கைது செய்யும் நிலையும் உள்ளது.
இதற்கு முடிவு கட்ட இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவது அவசியம். அதற்கு மூன்று அரசுகளும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.