தமிழகம் முழுவதும் கன மழை- 2 நாட்களில் படிப்படியாக குறையலாம்
வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. இது தற்போது வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று பிற்பகல் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் வெளியிட்ட அறிக்கை...
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழத்தின் பெரும்பாலான பகுதிளில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக செஞ்சியில் 18 செமீ மழை பெய்துள்ளது. ஒரத்தநாடு, கன்னியாகுமரியில் தலா 17 செமீ, திருச்செந்தூர், சாத்தனூர் அணை ஆகியவற்றில் தலா 15 செமீ, பொன்னேரி, தொழுதூர், வலங்கைமானில் தலா 14, திருக்கோவிலூர், பாபநாசம், நாகர்கோவில் தலா 13 செமீ மழை பெய்துள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை, திருவையாறு தலா 12, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், மயிலாடி தலா 11, செங்கல்பட்டு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சை, கடலாடி, முதுகுளத்தூர் தலா 10, விருத்தாச்சலம், மதுக்கூர், குடவாசல், மணிமுத்தாறு, சாத்தான்குளம், செய்யாறு தலா 9, சோழவரம், பண்ருட்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்னம், தரங்கம்பாடி, த்கலை, அரியலூர் தலா 8, செய்யூர், காஞ்சிபுரம், தாம்பரம், பூந்தமல்லி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், பேராவூரணி, கரம்பக்குடி, கமுதி, பூதப்பாண்டி, வந்தவாசி, கோவை, செட்டிக்குளம், புல்லம்பாடி, திருச்சி தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
17ம் தேதி காலை வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழை அல்லது மிக பலத்த மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர்களைப் பொறுத்தமட்டில்,அடுத்த 24 மணி நேரத்தில வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யக் கூடும்.
அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையக் கூடும்.
நெல்லையில்...
நெல்லையில் நேற்று மதியம் லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது.
விக்கிரமசிங்கபுரம், திசையன்விளை, வடக்கன்குளம் பகுதிகளில் பலத்த மழையும் அம்பாசமுத்திரம், தென்காசி, வள்ளிiர், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், ஏரல், உடன்குடி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரியில் நேற்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 உள்ளிட்ட அனைத்து அணைகளும் நேற்று மூடப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சிக்கம்பட்டியில் வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்த கருப்பாயி (45), பாண்டியம்மாள் (30), பூவரசம்பட்டியை சேர்ந்த தங்கம்மாள் (46) ஆகியோர் பம்புசெட் அறையில் ஒதுங்கினர்.
அப்போது திடீரென்று மோட்டார் அறை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் கருப்பாயி அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த தங்கம்மாள், பாண்டியம்மாள் ஆகியோருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்றும் காலையில் இருந்து தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்துகொண்டே இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளாக கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், கட்டுமாவடி போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. கரூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது.
கடலூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் மழை கொட்டியது.