ஆண்டுக்கு ரூ.1,500 வரி வசூலிக்கும் நக்ஸல்கள்

ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளிலும் மேற்கு வங்கம், ஆந்திரா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நக்ஸல்கள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
நக்ஸல்களின் வளர்ச்சிக்கு இந்த மாநிலங்களில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வும், ஏழை மக்களுக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறைகளும் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
நக்ஸல்களை தங்களுக்காக போராடுபவர்களாக இம் மாநில பழங்குடி, மலைவாழ், வனப் பகுதிகளின் மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக நாட்டின் கனிம வளத்தை தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டு கொள்ளையடிப்பதை நக்ஸல்கள் தட்டிக் கேட்பதை இந்த மக்கள் ஆதரிக்கின்றனர்.
நக்ஸல்களும் இந்த தொழில் நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்து மாதந்தோறும் ஏராளமாக பணம் வசூலிப்பதோடு, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கும் வரி விதிக்கின்றனர்.
போலீசால் ஏதும் செய்ய முடியாத நிலை உள்ளதால் நக்ஸல்களுக்கு இவர்கள் வரி கட்டியே ஆக வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த வகையில் நக்ஸல்கள் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை வரி வசூல் செய்வதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு வசூல் செய்யும் பணத்தில் தான் ஆயுதங்களையும் தங்களது குழுவில் உள்ளவர்களுக்கு உணவு, உடைகளும் வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு மியான்மார், நேபாளம், வங்க தேசம் வழியாக சீன ஆயுதங்கள் வந்து கொண்டுள்ளன.
இந் நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விலை அதிகரித்துவிட்டதால், தாங்கள் வசூலிக்கும் வரியையும் நக்ஸல்கள் சமீபத்தில் உயர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வரி விகிதத்தை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக உளவுப் பிரிவுகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன.
தாங்கள் வசூல் செய்யும் தொகைக்கு நக்ஸல்கள் ரசீது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை வரி வசூலாகிறதாம்.
டெல்லிக்கு குறி:
இந் நிலையில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் நக்ஸலைட்டுகள் வேட்டையில் ஈஈடுபடவும் குண்டு வீசி தாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலால் எரிச்சலடைந்துள்ள நக்ஸலைட்டுகள் டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இது குறித்து மத்திய உளவுப் பிரிவான ஐபி மத்திய அரசை எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில 100 முதல் 200 மாவோயிஸ்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தலாம் என்றும், அவர்கள் சிறு, சிறு குழுக்களாக டெல்லி புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பரீதாபாத் நகரில் மாவோயிஸ்டுகள் அதிக அளவில் பதுங்கி உள்ளதாகவும் ஐபி எச்சரித்துள்ளது.
இதனால் முக்கிய இடங்களுக்கும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்களிலும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் நக்சல் பாதிப்பு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களையும் கண்காணிக்கவும் டெல்லி போலீசாருக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications