மதுரையில் ரயில் டிக்கெட்களில் மோசடி - ரூ. 2 லட்சம் அபராதம்
மதுரை: இ டிக்கெட்களில் மோசடி செய்தும், பிறர் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்களில் மோசடியாக பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பெருமளவில் ரயிலில் பயணிகள் வருகிறார்கள்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழாக்காலங்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. சிறப்பு ரயில்கள் விட்டாலும் கூட டிக்கெட் கிடைப்பதில்லை.
இதற்கு இ டிக்கெட் எனப்படும் இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதியே காரணம். பல ரயில்வே டிக்கெட் புரோக்கர்கள் இ டிக்கெட்களை பெருமளவில் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டு பெரிய விலைக்கு விற்று விடுகிறார்கள். இதனால் அப்பாவி பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மதுரையில், தெற்கு ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு, டிக்கெட் பரிசோதனை படை இணைந்து முக்கிய ரயில்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் முன்பதிவு பட்டியலில் பெயர் இடம் பெறாத ஏராளமான இ-டிக்கெட் பயணிகள் முன்பதிவு மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல உரிய ஆவணங்கள் இல்லாமல் இ-டிக்கெட் முறையில் பலர் பயணம் செய்ததும் தெரிய வந்தது. இ-டிக்கெட் முறையை தவறாக பயன்படுத்திய 64 பேரை டிக்கெட் பரிசோதனை படை கண்டு பிடித்தது. அவர்களிடம் அபராத தொகையாக ரூ.48 ஆயிரத்து 75 வசூலிக்கப்பட்டது.
மேலும் இ-டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் வேறு ஒருவரின் பெயர்களில் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்தவர்கள் என 324 பேரை டிக்கெட் பரிசோதனை குழு கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் அபராத தொகை வசூலித்தது.
முன்பதிவு, இ-டிக்கெட் முறையில் அதிக அளவில் மோசடி நடந்துள்ளதால் முக்கிய ரயில் டிக்கெட் முன் பதிவு மைங்கள், ரெயில் பயண சீட்டு ஏஜெண்டுகளின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முறையற்ற விதத்தில் டிக்கெட் விற்பனை செய்ததாக புரோக்கர்கள் 5 பேரும், ஒரு ஏஜெண்டும் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications