மீண்டும் மலர்கிறது இந்திய-ரஷ்ய வர்த்தக உறவு
பெங்களூர்: இந்தியா - ரஷ்யாவுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக மந்தமாக இருந்த வர்த்தகம் தற்போது, பெருமளவு செழிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த 1990ல் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுடன் அதிகளவு வர்த்தக தொடர்புகள் கொண்ட நாடாக ரஷ்யா திகழ்ந்தது. அப்போது இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் 16 சதவீதம் ரஷ்யா உடனானதாக இருந்தது. ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே இந்த அளவு 2 சதவீதமாக குறைந்துவிட்டது.
அப்போதிலிருந்து இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
டாடா, ரிலையன்ஸ், விஜய் மல்லையாவின் யூபி குரூப் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் பார்வை ரஷ்ய சந்தையின் மீது உறுதியாக விழுந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், டாடா டீ, டாடா டெலிகாம், ரிலையனஸ் இன்டஸ்டிரிஸ், யூபி குரூப்பின் வோட்பா விஸ்கி வகையறாக்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவில் கால் பதிக்கின்றன.
ரஷ்யாவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி, அன்றாடம் பயன்படுத்தக் கூடிய வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை வருவாய் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 500 டாலராக உள்ளது. இது இந்தியாவை ஒப்பிடும்போது, 10 மடங்கு அதிகம். இந்த ஒரு விஷயமே இந்திய நிறுவனங்களின் ரஷ்ய படையெடுப்புக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
மேலும், ஜாகர், லேண்ட்ரோவர் போன்ற கார்களின் விற்பனை ரஷ்யாவில் கடந்தாண்டு 12 சதவீதம் அதிகரித்தது. இதற்கு மாறாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார் வர்த்தகம் ஒப்பீட்டளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரத்தன் டாடாவின் டாடா மோட்டார்ஸ், மார்க்கீ பிராண்ட் மற்றும் புதிய ரக சொகுசு கார்களை ரஷ்யாவில் இறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் ரஷ்யாவில் டாடா காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தேயிலை பயன்படுத்துவதில் வேறெந்த நாடுகளை விட ரஷ்யா எட்ட முடியாத முதலிடத்தில் இருப்பதால், இயல்பாகவே டாடா டீயும் ரஷ்யாவில் பரவ திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஆர்டிகாம் நிறுவனத்துடன் டாடா கம்யூனிக்கேஷன்ஸ் கூட்டு சேர்ந்து சர்வதேச சேவை வழங்க திட்டமிட்டுள்ளன.
கடந்தாண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-ரஷ்ய சி.இ.ஓ கவுன்சிலின் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ள முகேஷ் அம்பாணியும் ரஷ்யா மீது கண் வைத்துவி்ட்டார். கூடிய விரைவில் ரஷ்யாவின் பெட்ரோலிய ரசாயணத் துறையில் ரிலையன்ஸ் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு மருந்து பொருள் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதோடு, வோட்கா தயாரிப்பில் ரஷ்யாவின் முன்னணி நிறுவனமான ஸ்டாண்டர்டு-வுடன் விஜய் மல்லையாவின் யூபி குரூப் கைகோர்க்கிறது.
இந்த வர்த்தக முயற்சிகள் தொடர்ந்து வெற்றகரமாக நடந்தால், 2010ல் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 10 பில்லியன் டாலரை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008ல் இது 6.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.