காஷ்மீரில் பிரிபெய்டு தடை-விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் பிரிபெய்டு மொபைல் இணைப்புகளுக்கு தடை விதித்தது குறித்து விளக்கமளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல் போன் பிரிபெய்டு இணைப்புகளுக்கான சேவையை அரசு தடை செய்துள்ளது. முன்பே பெறப்பட்ட பிரிபெய்டு கார்டுகளும் நவ.1ம் தேதி முதல் புதுப்பிக்க முடியாதபடி முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், 'பிரிபெய்டு செல்போன் சேவையை அரசு தடை செய்துள்ளது சர்வாதிகாரமான, சட்டவிரோதமான முடிவு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்.
பாதுகாப்பு காரணங்களைக் கூறும் அரசு, போஸ்ட் பெய்டு இணைப்புகள் வழங்குவதற்கு விண்ணப்பதாரர்களின் தகவலை சரிபார்ப்பது போலவே, பிரிபெய்டு விண்ணப்பங்களையும் கையாளலாம்' என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை, தொலைத்தொடர்பு துறை மற்றும் காஷ்மீர் மாநில அரசு, இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.