முன்னாள் தெலுங்கு தேச ஜாம்பவான் பி.உபேந்திரா மரணம்
ஹைதராபாத்: டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமாராவ் தொடங்கிய காலம் முதல் அவரது வலது கரம் போல திகழ்ந்து வந்தவர் உபேந்திரா. டெல்லியில், தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவர்.
தேசிய அரசியலில் உபேந்திராவுக்கென்று தனிப் பெயர் இருந்தது.
73 வயதான உபேந்திரா உடல் நலக்குறைவால் சமீப காலமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நோய் முற்றி ஹைதராபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
உபேந்திராவுக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். விஜயவாடா எம்.பியான லகடிபதி ராஜகோபால் இவரது மருமகன் ஆவார்.
தெலுங்கு தேசம் கட்சியின் ஜாம்பவானாக திகழ்ந்தவரான உபேந்திரா பின்னர் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயாவாடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அக்கட்சியில் இணைந்தார்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் அரசியல் விவகாரக் கமிட்டித் தலைவராக இருந்தார்.
ஆரம்பத்தில் இவர் ரயில்வே பி.ஆர்.ஓவாக இருந்தவர். திட்டமிடுவதில் வல்லவர் உபேந்திரா. என்.டி.ஆருக்கும், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட பெரும் உதவி புரிந்தவர்.
பிரதமர் இரங்கல்...
உபேந்திரா மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உபேந்திராவின் மனைவி வசுந்தராவுக்கு பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியை நாடு இழந்துள்ளது. உபேந்திராவின் மரணம் ஆந்திராவுக்கும், நாட்டுக்கும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு நேரில் அஞ்சலி...
முதல்வர் கருணாநிதியும் உபேந்திராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஹைதராபாத் சென்று உபேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.