போதையில் தகராறு- 2 போலீஸாருக்கு 'தர்ம' அடி!
ஈரோடு: ஈரோடு அருகே குடித்து விட்டு மாணவர்களிடம் தகராறு செய்த இரு போலீஸ்காரர்களை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பெருந்துறை காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் மேகநாதன். இதேபோல சித்தோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஞானசேகரன்.
இருவரும் சீருடை இல்லாமல், குடித்து விட்டு போதையில் நடந்து வந்தனர். வெள்ளோடு பகுதிக்கு வந்த அவர்கள் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேரை வழிமறித்து நிறுத்தினர்.
அவர்களிடம் காரணமே இல்லாமல் கடுமையான வார்த்தைகளில் பேசினர். இதனால் மாணவர்கள் கோபமடைந்தனர். போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அடிதடியாக மாறியது. இரு தரப்பும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
சத்தம் கேட்டு மக்கள் திரண்டு விட்டனர். குடிபோதையில் மாணவர்களை வம்புக்கு இழுத்த போலீஸார் மீது கோபம் கொண்ட அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வெள்ளோடு போலீஸார் இரு போலீஸாரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் இரு போலீஸாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இருப்பினும் காவல்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இரு போலீஸார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications