விமான கதவு தயாரிக்கும் இந்தியா!: விமானமே தயாரிக்கும் சீனா!!

இந்திய விமானப் படையின் நம்பர் டூ நிலையில் உள்ள பிரணாப் குமார் பர்போரா, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பேசுகையில்,
நம் முப்படைகளின் பலத்தை அதிகரித்தாக வேண்டும். இதைச் செய்ய வேண்டியது அரசும் அதிகாரவர்க்கமும் தான். ஆனால், அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டைகளையும் அதிகாரவர்க்கம் போடும் முட்டுக் கட்டைகளையும் தாண்டித்தான் முப்படைகளும் இயங்க வேண்டிய நிலை உள்ளது.
நமது பாதுகாப்புடன் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு கட்சி பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்கள் வாங்க ஒரு திட்டத்தை அனுமதிக்கிறது. அதே கட்சி எதிர்க் கட்சியாகிவிட்டால் தான் தந்த அனுமதியையே எதிர்க்கிறது. அரசியல்வாதிகளின் இந்த குறுகிய மனப்பான்மையால் பாதிக்கப்படுவது நமது பாதுகாப்பும் முப்படைகளின் செயல்திறனும் தான்.
நமது பொதுத்துறை நிறுவனங்கள் சோசலிஷ கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடும் மட்டமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிறுவனங்களை வைத்துக் கொண்டு பாதுகாப்புத்துறையை எப்படி பலப்படுத்த முடியும்?.
நம் நாட்டு ராணுவ பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) , ஐரோப்பாவின் ஏர் பஸ் நிறுவனத்துக்கு கதவு செய்து தருவதையே மிகப் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், சீனா பொது நிறுவனங்கள் முழு விமானத்தையே தயாரித்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் கூட ஆயுத ஏற்றுமதியில நம்மைவிட முன்னேறியிருக்கிறது.
ஆனால், நாம் ஆயுதங்களுக்காக இன்னும் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் நினைத்தால் ஆயுதங்களைத் தருவார்கள்.. நினைத்தால் நிறுத்தி விடுகிறார்கள். நமக்குத் தேவையான 70 சதவீத ஆயுதங்களை இன்னும் இறக்குமதி தான் செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் போக்ரானில் அணு குண்டு போட்டவுடன் ஆயுதங்கள் தருவதை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் நிறுத்தின.
நமது ராணுவ பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்த அதில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க வேண்டும். இதை ஆண்டாண்டு காலமாக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆயுத உற்பத்தியில் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு முழு அளவில் அனுமதி தரப்பட வேண்டும். இந்த நிறுவனங்களுக்க நிதியுதவியும், ஆயுத ஏற்றுமதி செய்யும் சுதந்திரமும் தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் எந்தத் தனியார் நிறுவனமும் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முன்வராது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நம்பிக் கொண்டிருக்காமல் விமானப் படை தனியார் நிறுவனங்களிடம் 50 விமானத் தளங்களை ஒப்படைத்தது. அவை மிகச் சிறப்பாக நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார் பர்போரா.
சில நாட்களுக்கு முன் ராணுவம் உள்பட முப்படைகளில் பெண்களை சேர்ப்பது வேஸ்ட், அது ஒரு தேவையில்லாத சுமை என்று கருத்துத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் பர்போரா. இந் நிலையில் இப்போது அரசியல்வாதிகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் காய்ச்சி எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications