வாடிக்கையர் சேவையில் முந்தைய தலைமுறைக்கும் பின்னே உள்ள பிஎஸ்என்எல்
சென்னை: இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து விழா நடத்தி அறிமுகப் படலத்தை முடித்துவிட்டார்கள் அதிகாரிகள். அவரவர் கேக் - ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு அத்தோடு மறந்துவிட்டார்கள் விஷயத்தை.
சரி... பிஎஸ்என்எல் 3 ஜி சேவை மக்களைச் சென்று சேர்வது கிடக்கட்டும்... அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கிறதா முதலில் என்று பார்க்க, சென்னை தாமஸ் மலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஒரு நடை போனோம்.
செல்போன் சேவைப் பிரிவில் அமர்ந்திருந்த ஒரு பெண் அலுவலரிடம் 3 ஜி பற்றிய விவரம் கேட்டோம். பக்கத்து சீட்காரருடனான தனது பேச்சுக் கச்சேரியை வேண்டா வெறுப்பாக இடை நிறுத்திவிட்டு, எங்களுக்கு எந்தத் தகவலுமில்லை... என்றவர், வெளியே போஸ்டர் ஒட்டியிருக்கிறோம் படித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சரி, வேறு அலுவலரைக் கேட்கலாம் என்று முடிவு செய்து போய்க் கேட்டோம். அவரோ சாதாரண செல்போன் அழைப்புக் கட்டண விவரங்கள் அடங்கிய ஒரு தாளைக் கையில் கொடுத்து, இதிலிருக்கு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூசாமல் கொடுத்துவிட்டு போயே போய்விட்டார்.
வெறுத்துப் போய்விட்டது... சரி இந்த ஒரு அலுவலகம்தான் இப்படியா... அல்லது மற்ற அலுவலகங்களிலும் 3 ஜிக்கு வாடிக்கையாளர் சேவை லட்சணம் இதுதானா என்று அறிய கேகே நகர் இணைப்பகத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கே இருந்த பெண் ஊழியர், என்ன 3 ஜி விவரம் வேணுமா... இந்தாங்க என்று ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கையில் கொடுத்தார். ஏதும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பிரசுரத்தில் 3 ஜி மொபைலின் மகாத்மியங்களை ஒரு வண்டி அளவுக்கு அடித்துத் தள்ளியிருந்தார்கள்.
ஆனால் எப்போது சர்வீஸ் கிடைக்கும், கட்டணம் எவ்வளவு, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எவ்வளவு, புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் என்ன... பிராட்பேண்ட் ஸ்பீட் என்ன... தொலைக்காட்சி சேவை முற்றிலும் இலவசமா அல்லது சேனலுக்கு இவ்வளவு என்று பாக்கெட்டில் கை வைப்பார்களா? ம்ஹூம்.. ஒரு தகவலுமில்லை.
பானையிலிருக்கிற எல்லா சோற்றையும் கொட்டியா பதம் பார்க்க முடியும்... அட போங்கப்பா... இது 3 ஜி இல்லை... மைனஸ் 3 ஜி !!