சரக்கு ரயில் என நினைத்து குண்டு வைத்து விட்டதாக மாவோயிஸ்டுகள் மன்னிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதற்கு மாவோயிஸ்டுகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். சரக்கு ரயில் வருகிறது என நினைத்து குண்டு வைத்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சிகளில் மாவோயிஸ்டுகள் இறங்கியுள்ளனர். அங்கு தேர்தலை புறக்கணிக்கக் கோரி நேற்று பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ரயில் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்தனர் மாவோயிஸ்டுகள். இந்த கோர சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தண்டவாளம் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து மாவோயிஸ்டுகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜார்கண்ட், பீகார், ஒரிசா மாநில மாவோயிஸ்ட் மண்டல கமிட்டி செயலாளர் சாம்ராஜ் கூறுகையில்,
பொதுமக்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. பொது மக்கள்தான் எங்கள் இயக்கத்தின் சொத்து. அவர்களுக்காகவே இந்த இயக்கம் செயல்படுகிறது.
சம்பவம் நடந்த ரயில் பாதையில் சரக்கு ரயில் ஒன்றுக்குத்தான் குறி வைக்கப்பட்டது. ஆனால் எமது இயக்கத்தில் சேர்ந்த புதிய இளைஞர்கள் தவறுதலாக பயணிகள் ரயிலை கவிழ்த்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல ரயில்வே தண்டவாளங்களில் 5 இடங்களில் தகர்க்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை. இதுபற்றியும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.
2 பேர் பலியானதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் இலக்கு ஒருபோதும் அப்பாவி மக்கள் அல்ல. எனவே இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று கூறிக்கொள்கிறோம்.
நேரத்தை தவறாக கணித்ததாலும், குழப்பத்தில் அவசரம், அவசரமாக செயல்பட்டதாலும்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. இனி கவனமாக இருப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications