மும்பை தாக்குதல்-இத்தாலியில் பாக்.கை சேர்ந்த தந்தை-மகன் கைது
லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை இத்தாலி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை நடந்த ரெய்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரஸ்ஸியா என்ற நகரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஸ்டெபனோ பொன்சி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இருவரும் மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்ட தீவிரவாதிகள் மற்றும் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட நிதியுதவிகளைச் செய்துள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
ஒரு பணப் பரிமாற்ற ஏஜென்சி மூலம் இந்த நிதியுதவி செய்யப்பட்டது. இந்தப் பணத்தை பயன்படுத்தித்தான் இன்டர்நெட் போன் கணக்கைத் தொடங்கி அதன் மூலம், பாகிஸ்தானில் இருந்த படி சதியாளர்கள், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி இந்த இருவரும் இன்டர்நெட் போன் கணக்கை தொடங்குவதற்குத் தேவையான பணத்தை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர், எந்த ஊர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை கசாப் மட்டுமே முக்கிய நபராக சிக்கியுள்ளான். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வெளியே ஒரு நாட்டில் மும்பைத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைதாகியுள்ளது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications