ரெட்டி சகோதரர்களிடம் ரூ. 5000 கோடி வாங்கினார் ராஜசேகர ரெட்டி - நாயுடு
சித்தூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களிடமிருந்து மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 5000 கோடி பணம் வாங்கினார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் அங்கு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. ஆந்திர முதல்வர் ரோசய்யா (காங்கிரஸ்), தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர்.
ஹைதராபாத்தில் நடந்த மாநகராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது சகோதரர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் ஏராளமான இரும்பு கனிம சுரங்கங்கள் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்தது. அதில் ரூ.5 ஆயிரம் கோடியை ராஜசேகர ரெட்டிக்கு கொடுத்தனர்.
இந்த பணத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினர் டி.வி. சேனல், பத்திரிகைகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ராஜசேகர ரெட்டியின் இந்த முறைகேடுகள் விரைவில் வெளிவரும். நாட்டில் நடைபெறும் முக்கிய ஊழல் புகார் வழக்குகளை தற்காலிகமாக வேண்டுமானால் மூடிமறைத்து விடலாம். எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும் போது அத்தனை ஊழல் வழக்குகளும் முறைப்படி நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றார்.
நாயுடுவின் இந்தப் புகார் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications