படகுகளில் கருப்பு கொடி - மீனவர் தினம் துக்க தினமாக அனுசரிப்பு
கன்னியாகுமரி: உலக மீனவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கன்னியாகுமரி பகுதிகளில் வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும் நவ 21ம் தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளை வலியுறுத்தி பொது கூட்டம், தொடர் ஜோதி ஓட்டம், பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த ஆண்டு மீனவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்க மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் முடிவெடுத்தன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மீனவர் தினமான நேற்று குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமார் 41 மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளிலும், 15 ஆயிரத்துக்கு அதிகமான வள்ளங்களிலும், ஆயிரத்திற்கும் அதிகமான கட்டு மரங்கள் மூலம் 50 ஆயிரம் மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இதன் முலம் அரசுக்கு பல கோடி ரூபாய் அண்ணிய செலவாணி வருவாயகா கிடைத்து வருகிறது.
நேற்று துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகள் மற்றும் கட்டுமரம், வள்ளங்களை நிறுத்தியிருந்தனர்.
இதேபோல தமிழகத்தின் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் மீனவர்கள் துக்க தினமாக மீனவர் தினத்தை அனுசரித்தனர்.