தீவிரவாத தாக்குதல்: தாஜ்-டிரைடன்ட் ஹோட்டல்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு!

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் புகுந்த தீவிரவாதிகளின் கையில் சிக்கி தாஜ் கருகிப் போனது. கிட்டத்தட்ட 3 நாட்கள் தாஜ் ஹோட்டலை முற்றுகையிட்டிருந்த தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்டவற்றால், தாஜ் ஹோட்டலின் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.
அதேபோல டிரைடண்ட் ஹோட்டலும் பெரும் சேதமடைந்தது.
இந் நிலையில், இந்த இரு ஹோட்டல்களுக்கும் இழப்பீட்டுத் தொகையாக ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 167 கோடியை வழங்கியுள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யோகேஷ் லோஹியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாஜ் மற்றும் ஓபராய் டிரைடன்ட் ஹோட்டல்களுக்கு ரூ. 167 கோடி இழப்பீட்டு நிதியை இதுவரை கொடுத்துள்ளோம். தொடர்ந்து தாஜ் ஹோட்டலின் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
கடந்த 2001ம் ஆண்டுதான் தீவிரவாதத் தாக்குதல்களில் சிக்கி சேதம் ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டத்தை உயிர்காப்பீடு அல்லாத பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 167 கோடியில் முதல் கட்டமாக தலா ரூ. 25 கோடி நிதியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு ஹோட்டல்களுக்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த இரு ஹோட்டல்களும் ரூ. 500 கோடி இழப்பீடு கோரியுள்ளன.
இறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்குத் இறுதி அறிக்கையை தாஜ், டிரைடன்ட் ஹோட்டல் நிர்வாகங்களிடம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோரியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications