இங்கிலாந்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
லண்டன்: ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகள் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.
பிரிட்டனில் சமீப ஆண்டுகளாக மழை கடுமையாக பெய்து, பல நகரங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த கோடைகாலத்தில் பெய்த மழை, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது. கடந்த 2007ல் ஏற்பட்ட வெள்ளத்தால், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் தொடங்கிய மழையால் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
கம்ரியாவில் உள்ள காக்கர்மவுத், தெர்வன்ட் மற்றும் வொர்க்கிங்டவுன் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்று வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு தெருக்களில் புகுந்ததால் ஏராளமான மக்கள் தரைதளத்தை விட்டுவிட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்து தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. வொர்கிங்டன் பகுதியில் ஒரே நாளில் 314 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இங்கிலாந்து வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. நவம்பர் மாதம் முழுக்க பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட்டது என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் போலீசார் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications