பெங்களூர்-சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட்களுக்கு கிராக்கி
பெங்களூர்: ஒரு பெட்ரூம், சின்ன ஹால், சமையலறையுடன் கூடிய அடக்கமான சிறிய அபார்ட்மென்ட்களுக்கு பெங்களூரில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். இதனால் இப்படிப்பட்ட கையடக்கான அபார்ட்மென்ட் வீடுகளைக் கட்ட பில்டர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
ஸ்டுடியோ அபார்ட்மென்ட் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். இப்படிப்பட்ட அபார்ட்மென்ட் வீடுகளுக்கு பெங்களூரில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. காரணம் - டபுள் பெட்ரூம் வீடுகளின் விலை விண்ணைத் தொடுவதே காரணம்.
இதையடுத்து சிங்கிள் பெட்ரூம் வீடுகளைக் கட்ட பில்டர்களும் ஆர்வமாக உள்ளனர். 500 முதல் 800 சதுர அடிப் பரப்பளவில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. விலை ரூ. 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
இத்தகைய குட்டி வீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள், புதிதாக திருமணமானவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெரும் பயன் தரும் என்று பில்டர்கள் கூறுகிறார்கள்.
தற்போது எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, பன்னரகட்டா சாலை ஆகிய பகுதிகளில்தான் இத்தகைய சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் அதிகளவில் எழும்பி வருகின்றன.
இதுகுறித்து புரவங்கரா குழுமத்தின் இயக்குநர் ரவி ராமு கூறுகையில், சிங்கிள் பெட்ரூம் வீடுகளை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கையடக்கமான விலை, சிறிய குடும்பங்களுக்கேற்ற வீடு என்பதால் இத்தகைய வீடுகளுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் பிரிவு நன்றாக இருந்தபோது 2 பெட்ரூம் வீடுகளைக் கூட வாங்க யாரும் இல்லை. அனைவருமே 3 பெட்ரூம் வீடுகளாகத்தான் விரும்பினர். ஐ.டி உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் சம்பளம் தந்ததால், சிங்கிள் பெட்ரூம் வீடுகளே கட்டப்படாத நிலை ஏற்பட்டுப் போனது.
தற்போது மீண்டும் சிங்கிள் பெட்ரூம் வீடுகளின் மீது மக்களுக்கு மோகம் திரும்பியுள்ளது. இன்றைய பொருளாதார சீர்குலைவு நிலையும் இதற்கு ஒரு காரணம் என்றார்.
பிரிகேட் குழுமம் என்ற இன்னொரு பிரபல கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில், நாங்கள் புதிதாக அறிவித்துள்ள 10,000 அபார்ட்மென்ட் வீடுகளில் 30 முதல் 40 சதவீதம் வரை சிங்கிள் பெட்ரூம் வீடுகளாக இருக்கும் என்று அதன் தலைவர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.