சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் சிபிஐ ரெய்ட்
சென்னை: சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குப் பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றன.
இந்த சரக்குப் பிரிவில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நேற்று இரவு 18 சி.பி.ஐ அதிகாரிகள் சரக்குப் பிரிவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இங்கிருந்து அனுப்பப்பட்ட பொருட்களின் ஆவணங்கள், இங்கு வந்த பொருட்களின் ஆவணங்களின் பட்டியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சரக்குப் பிரிவின் கணக்கு பட்டியலையும் சோதனை செய்தனர்.
மேலும் இங்கு சோதனையில் ஈடுபடும் சுங்க இலாகாவினரின் ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் சில சரக்கு ஏஜெண்டுகளிடமும் விசாரணை நடத்தினர்.
விடியவிடிய நடந்த சோதனை இன்றும் தொடர்ந்தது.
சோதனையின்போது கணக்கில் வராத ரூ.15 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 11 பேர் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.