சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70 கோடியில் புதிய கட்டடம்
சென்னை: சென்னை மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 70 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகரின் மையப் பகுதியில் இருந்த மத்திய சிறையைப் புழல் பகுதிக்கு மாற்றியதால் ஏற்பட்ட 13.23 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை அரசுப் பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்.
சென்னை அரசுப் பொது மருத்துவமனை 175 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. இம்மருத்துவமனை இந்த ஆண்டு 175ம் ஆண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. 2,722 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனையுடன் இணைந்து சுமார் 2,000 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 12,000 வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனை 30 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் பலர் உலகமெங்கும் வியாபித்திருக்கும் நிலையில் அந்த மருத்துவக் கல்லூரி பழைய கட்டிடங்களிலேயே இதுவரையில் இயங்கி வருகிறது.
எனவே தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில்; தற்போதுள்ள சென்னை அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் நூறு ஆண்டுகள் பழமையானது என்பதாலும், பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையும் விதத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரிக்காக புதிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டலாம் என முதல்வர் முடிவு செய்துள்ளார்.
அந்த புதிய கட்டடம் 41,934 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இந்த 8 மாடி புதிய கட்டடத்தில் மருத்துவப் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு மேற்படிப்பு, செவிலியர் படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரே இடத்தில் படிப்பார்கள்.
சென்னை மருத்துவக் கல்லூரிக்காக உருவாகவிருக்கும் புதிய கட்டிடம் நவீன வசதிகளுடனும், மாதிரி மருத்துவக் கல்லூரியாகவும் விளங்கும் வகையில் உலகத் தரம் மிக்கதாக கட்டப்படும்.
இந்த புதிய எட்டு மாடி கட்டடத்தில் முதல் நான்கு மாடிகள் அனைத்து மருத்துவக் கல்லூரி பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். ஐந்தாவது மாடியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கான விரிவுரைக் கூடமாக இருக்கும்.
ஆறாவது மாடி கட்டடம் மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கும், ஏழாவது மாடியில் செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், எட்டாவது மாடி எல்லா மாணவர்களுக்குமாக தேர்வுகள் நடைபெறும் அரங்கமாக இருக்கும்.
தற்போது உள்ள மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், சென்னை அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும். கட்டடத்தின் ஒரு பகுதியில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் புராதன ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் டிசம்பர் மூன்றாவது வாரத்திற்குள் கோரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications