புதிய மீன்பிடி சட்டம் தேவையற்றது- ராமதாஸ்
சென்னை: மத்திய அரசு புதிதாக கொண்டுவரும் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம் மீனவர்கள் வாழ்வுரிமைக்கு எதிரானது. எனவே இதை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மிகக் கடுமையான கட்டுப்பாடுகளையும், கடுமையான தண்டனையும் கொண்ட, நமது மீனவர்களை அச்சுறுத்துகிற வகையில் ஒரு கறுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிடுகிறது. இது தேவையற்றது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தகுந்த திருத்தங்களுடன் அதனை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம் என்ற முயற்சியை கைவிட்டு, அந்த சட்ட முன்வடிவை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
12 கடல் மைல்களுக்கு அப்பால் அனுமதியின்றி செல்லக்கூடாது என்றும், அப்படி சென்று மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் வரை அபராதம், அத்துடன் சிறைத்தண்டனை என்பன உள்ளிட்ட கடுமையான பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம், மீனவர்களின் தொழில் சுதந்திரத்தை பறித்துவிடும்.
தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கையின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் முன்பு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. அதன் பலனை தமிழக மீனவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
பாக் ஜலசந்தி பகுதியில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வந்த உரிமையை நமது மீனவர்கள் இழந்து தவிக்கிறார்கள். பெரும் துன்பத்திற்கும், பொருளாதார இழப்பிற்கும் ஆளாகி வருகிறார்கள். இத்தகைய நிலையில், இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது நமது மீனவர்களின் நலனுக்கு முற்றிலுமாக எதிரானது மட்டுமின்றி நடைமுறை சாத்தியமற்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications