மாவீரர் நாள் பேனர்-இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் கிழிப்பு
ஈரோடு: மாவீரர் தினத்தையொட்டி ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த
பேனர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான காங்கிரசார் கிழித்து எறிந்தனர்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று மாலை தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தியாகு பேசவுள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில், மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
காவல் நிலையம் முற்றுகை போராட்டம்:
பிரபாகரன் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தாங்கள் முறையாக அனுமதி பெற்றே பேனர்களை வைத்ததாகவும், எனவே அவற்றை அகற்றிய இளங்கோவன் உட்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
முத்துக்குமரன் படத்துக்கு அஞ்சலி:
இந் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி சார்பில் மாவீரர் நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமரனின் படம் மற்றும் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுவரொட்டி-திருச்சியில் 2 இலங்கை தமிழர்கள் கைது:
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் வாழ்த்து சுவரொட்டி ஓட்டிய 2 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ரயில்வே ரவுண்டானா அருகே பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டியதாக ஐய்யப்ப நகர் பிரசாத் தெருவில் வசிக்கும் நிஷாந் (16), அண்ணாநகர் சிம்கோ மீட்டர் பகுதியை சேர்ந்தவர் சசிகரன் (22) ஆகிய 2 இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 30 வாழ்த்து போஸ்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகாம்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு:
இதற்கிடையே பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர் முகாம்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications