டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்திற்கு பஞ்சம்-பலர் ஏமாற்றம்
மதுரை: மதுரை தலைமை தபால் நிலையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு விண்ணப்பங்கள் தினமும் குறைவாக வழங்கப்படுவதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அடுத்தாண்டு ஏப்ரலில் குரூப் 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் வழங்கப்படுகின்றன. ரூ.30 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மதுரையில் வடக்கு வெளி வீதி, தல்லாகுளம், அரசரடி தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தினமும் 9.30 மணி முதல் குறைந்த அளவு விண்ணப்பங்களே விற்பனை செய்யப்படுவதால் காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகின்றனர்.
சிறிது நேரத்தில் விண்ணப்பங்கள் காலியாகி விடுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
'இதுபற்றி தபால் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், டி.என்.பி.எஸ்.சி அனுப்பும் விண்ணப்பங்கள் குறைந்த அளவிலேயே இருப்பதாக கூறுகிறார்கள்.
விண்ணப்பங்களை தபால் அலுவலகத்தின் மூலம் வினியோகிப்பதற்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கலாம்' என்று பொதுமக்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications