தமிழகத்தில் மணல் கொள்ளையே நடக்கவில்லையாம்!
சென்னை: தமிழகத்தில் மணல் திருட்டு நடக்கவில்லை என்று ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான் தெரிவித்தார்.
தமிழக ஆறுகளில் மணல் திருட்டு காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தொடர்பாக ராஜ்யசபாவில் அ.தி.மு.க எம்.பி மலைச்சாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் பிருத்விராஜ் பதில்ளிக்கையில், தமிழக ஆறுகளில் முறைகேடான மணல் அள்ளும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தனியார் மணல் குவாரிகளின் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2003ல் இருந்து தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூலமே கட்டுமானப் பணிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப் பணித்துறை மூலம் மணல் குவாரிகளின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இயற்கை வளம் மற்றும் பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்களின் முறையான அனுமதியுடன் தான் ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர் பாதிக்காமல், ஆறுகளில் 1 மீட்டருக்கு குறைவான ஆழத்தில் தான் மணல் அள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைக்கு எவ்விதப் பாதிப்பு இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வருகின்றது என்றார்.