சர்வதேச அணுசக்தி கமிஷனில் ஈரானுக்கு எதிராக இந்தியா ஓட்டு
லண்டன்: அணுசக்தி உற்பத்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி கமிஷன் தீர்மானத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
ஈரானில் அணுசத்தி உற்பத்திக்கான யுரேனியம் செரிவூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அணுசக்திக் கமிஷனில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த தீர்மானத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளது.
வியன்னாவில் சர்வதேச அணுசக்தி கழகத்தின் 35 உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரி்க்கா, இந்தியாவைத் தவிர ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய பெரியண்ணன்களும் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஈரானில் அணுஆயுத உற்பத்தி கூடாது, ராணுவ மற்றும் ஆக்கப்பூர்வ அணுசக்திக்கான உற்பத்தி தளங்களை பிரித்து சர்வதேச கமிஷனின் கண்காணி்ப்புக்கு உட்படுத்தலாம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
உறவு பாதிக்காது - காங்.
ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளதால், இந்தியா -ஈரான் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் பாதிக்கப்படாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது வேறு, அது வேறு என்றும் அது விளக்கியுள்ளது.