இன்று பக்ரீத் - முஸ்லீம்கள் கொண்டாட்டம் - பிரதீபா, பிரதமர், கருணாநிதி வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளையொட்டி இன்று காலையில் நாடு முழுவதும் பள்ளிவாசல்கள், மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் காலையில் பள்ளிவாசல்களில் முஸ்லீம் சமுதாயத்தினர் தொழுகைகளில் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரதீபா பாட்டீல், பிரதமர், கருணாநிதி வாழ்த்து...
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் இன்று நாடெங்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.
மிலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கியது; உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்கியது; உதவித்தொகை பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதில் இருந்து 2400 ஆக உயர்த்தியது; உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது; அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அதிக அளவில் முஸ்லிம்கள் பயனடைய வழிவகுத்துள்ளது முதலான பல்வேறு சலுகைகளை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களிடம் அன்பு செலுத்திவரும் இந்த அரசின் சார்பில் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications