பிரணாப் குரலில் சர்தாரிக்கு மிரட்டல் விடுத்தது தீவிரவாதி!
டெல்லி: கடந்த ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்குப் போன் செய்து, பிரணாப் முகர்ஜி பேசுவது போல பேசி மிரட்டியது ஒரு தீவிரவாதி எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் சர்தாரிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் பிரணாப் முகர்ஜி என்றும், மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசினார் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதை இந்தியாவும், பிரணாப் முகர்ஜியும் திட்டவட்டமாக மறுத்தனர். தான் சர்தாரிக்கு போன் செய்யவே இல்லை என்று விளக்கினார் பிரணாப்.
இந்த நிலையில், பிரணாப் குரலில் ஒரு தீவிரவாதிதான் சர்தாரியைத் தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது தெரிய வந்துள்ளது. அந்த நபரின் பெயர் உமர் சயீத் ஷேக். இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இவ்வாறு ஷேக் பேசியுள்ளான்.
அதுமட்டுமல்லாமல் பிரணாப் முகர்ஜிக்கும் ஷேக் போன் செய்துள்ளான். அப்போது அந்த போன் அழைப்பை பிரணாபின் அலுவலக தொலைபேசி ஆபரேட்டர் எடுத்துள்ளார். அந்தப் பெண் அலுவலரிடம் தான் பாகிஸ்தான் அதிபர் என்றும், பிரணாபிடம் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளான் ஷேக்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட அந்த அலுவலர், அந்த அழைப்பை பிரணாப் முகர்ஜிக்குத் தரவில்லை.
இதேபோல அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனும் பேச முயன்றுள்ளான் ஷேக். இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு மூலமாக அவன் வெளியுறவு அமைச்சருக்குப் பேச முயன்றுள்ளான்.
இவை அத்தனையையும் அவன், பாகிஸ்தானின் கராச்சி சிறைக்குள் இருந்தபடி செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவிரவாதி உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய அமெரிக்க பத்திரிக்கையாளர் டேணியல் பியர்ல் கொலை வழக்கில் சிக்கி கைதாகி கராச்சி சிறையி்ல அடைக்கப்பட்டுள்ள நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பைச் சம்பவம் குறித்து தனது மனைவி சாதியாவிடமிருந்து தகவல் பெற்றுள்ளான் ஷேக். சாதியாவுடன் ரகசியமாக செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளான் ஷேக். அப்போதுதான் மும்பை சம்பவம் குறித்து அறிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இவனுக்கு லஷ்கர் இ தொய்பா தலைவன் ஜகியூர் ரஹ்மான் லக்வியுடன் தொடர்பு இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஷேக்கின் பின்னணியில் இன்னொரு கதையும் உண்டு. காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தின்போது இந்தியா விடுவித் தீவிரவாதிகளில் ஷேக்கும் ஒருவன் என்பதுதான் அது.












Click it and Unblock the Notifications