அதிகரித்து வரும் சிங்கள மீனவர் ஊடுறுவல் - 2 நாட்களில் 13 படகுகள் சிக்கின
சென்னை: கடந்த இரண்டு நாட்களில் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி சுற்றித்திரிந்த 13 இலங்கை மீன்பிடி படகுகளை இந்திய கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
சமீப காலமாக சிங்கள மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகும் செயல் அதிகரித்து வருகிறது. படு சுதந்திரமாக இவர்கள் இந்திய எல்லைக்குள் புகுகின்றனர். இவர்களை இந்திய கடலோரக் காவல் படை எந்த வகையான துன்பத்தையும் கொடுக்காமல், பத்திரமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் இவர்கள் மீண்டும் பத்திரமாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் படும் சித்திரவதை, அவமானங்களி்ல நூறில் ஒரு பங்கு கூட சிங்கள மீனவர்கள் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 13 மீன்பிடி படகுகளை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு உட்பட்ட பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, படகுகள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கண்டதாக கடலோரக் காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்ட இந்த மீன் பிடி படகுகள் ஒரு மாதத்திற்கும் மேலாக கடலில் தங்கியிருக்கும் திறன் கொண்டவை என அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் இதேபோன்று 69 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.