கைகா அணு மின் நிலைய கதிர்வீச்சுக்கு சதி வேலையே காரணம் -ககோத்கர்

இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ககோத்கர், சிலர் வேண்டும் என்றே குடிநீர் அடங்கிய வாட்டர் கூலரில் டிரைடியத்தை கலந்து விட்டுள்ளனர். எனவேதான் அந்த நீரைக் குடித்த 50 ஊழியர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சதி வேலையாகவே கருதப்படும்.
இந்த செயல் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். அணு சக்தி சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நவம்பர் 24ம் தேதி, வட கன்னட மாவட்டத்தில் உள்ள கைகா அணு மின் நிலையத்தின் முதல் பராமரிப்புப் பிரிவைச் சேர்ந்த 50 ஊழியர்கள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மல்லபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணைக்குப் பின்னர் ககோத்கர் மேற்கண்ட பேட்டியை அளித்தார்.
டிரைடியம் என்பது கிரேக்க மொழியில் மூன்று என்ற பொருளைக் கொண்டது. ஹைட்ரஜனின் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ஐசோடோப் ஆகும். இது ஆய்வு, அணு உலைகள், நியூட்ரான் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் வேதியியல் குறியீடு T அல்லது 3H என்பதாகும். டிரைடியத்திற்கு ஹைட்ரஜன்-3 என்ற இன்னொரு பெயரும் உண்டு.
டிரைடியத்தின் நியூக்ளியஸில் (டிரைடான்) ஒரு புரோட்டானும், 2 நியூட்ரான்களும் இருக்கும். மிகவும் அரிதான ஹைட்ரஜன் இது.












Click it and Unblock the Notifications