ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் - பெல்ட்டால் அடித்த கொடுமை
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துச் சென்றனர்.
ராமேசுவரம், சங்குமால் ஓலைக்குடா துறைமுகப் பகுதியில் இருந்து நேற்றும் நேற்று முன்தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களது நாட்டுப்படகுகளை நோக்கி 2 பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களுடன் சீன கடற்படையினரும் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.
மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர். மீனவர்கள் அங்கிருந்து படகுகளை திருப்ப முயன்றபோது, ரோந்து கப்பல்களில் இருந்து நாட்டுப்படகுகளில் இறங்கி மீனவர்கள் பிடித்து வைத்திருந்த சீலா, மாவுலா உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.
அப்போது மீனவர்களை இலங்கை கடற்படையினர் பெல்டுகளால் தாக்கி, அங்கிருந்து தப்பி ஓடுமாறு கூறியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக குறைந்த அளவு மீன்களுடன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினார்கள்.