அர்ச்சகர் தேவநாதன் மீது பெண்கள் செருப்பு வீச்சு
காஞ்சிபுரம்: அசிங்க அர்ச்சகர் தேவநாதன் மீது இன்று பெண்கள் சிலர் செருப்புகளை வீசித் தாக்கினர்.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதனை, கோவில் கருவறையில் பெண்களுடன் சல்லாபம் செய்தது தொடர்பான வழக்கில் காவலுக்கு எடுத்துள்ள போலீஸார் அவரை 3 நாள் விசாரணை செய்தனர்.
விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அவரை காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு வந்தனர். கோர்ட்டுக்கு தேவநாதன் அழைத்து வரப்பட்டபோது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர் செருப்புகளால் அவரை அடிக்க முற்பட்டனர். மேலும் அவர் மீது செருப்புகளையும் வீசி எறிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
துரிதமாக செயல்பட்ட போலீஸார் அந்தப் பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றம்:
இந் நிலையில் தேவநாதன் மீதான வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரை முதலில் 2 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். பின்னர் 3 நாள் காவல் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் தான் யார் யாருடன் உல்லாசமாக இருந்தேன் என்ற விவரத்தை தெரிவித்துள்ளார் தேவநாதன். இதை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களையும் பிடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இதுவரை இந்த வழக்கை விசாரித்து வந்த பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்திலிருந்து மாவட்ட குற்றப் பிரிவுக்கு தேவநாதன் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இனி இந்த வழக்கை மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரிப்பார் என மாவட்ட எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.