காமன்வெல்த் மாநாடு: இலங்கையில் இல்லை-ஆஸியில்
முன்னதாக கொழும்பில் இந்த மாநாட்டை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் அங்கு நடந்த ஈழப் போரில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதை சுட்டிக் காட்டி பல நாடுகள் பேசியதால் இலங்கை நிராகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் 2103ம் ஆண்டு மாநாட்டை இலங்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், பெர்த் நகரில் காமன்வெல்த் மாநாடு நடக்கவிருப்பது மிகப் பெரிய வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவுக்கு அளிக்கும். இது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சாதகமான விஷயம்.
ஆஸ்திரேலியாவின் மதிப்புகளையும், பெருமைகளையும் மட்டுமல்லாது பெர்த் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவையும் உலகுக்கு வெளிக்காட்ட இது உதவும் என்றார்.
மேற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் காலின் பர்னட் கூறுகையில், முதலில் 2011ம் ஆண்டு மாநாட்டை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்திருந்தது. இருப்பினும் அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்து பல நாடுகளும் குறிப்பிட்டதால் அங்கு நடத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
டிரினிடாட்- டொபாகோ பிரதமர் பாட்ரிக் மேனிங் கூறுகையில், இலங்கை 2013ம் ஆண்டு மாநாட்டையும், மொரீஷியஸ் 2015ம் ஆண்டு மாநாட்டையும் நடத்தும் என்றார்.
1981 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே காமன்வெல்த் மாநாடுகளை ஆஸ்திரேலியா நடத்தியுள்ளது. அப்போது முறையே மெல்போர்ன் மற்றும் கூலும் நகரங்களில் இந்த மாநாடுகள் நடந்தது.
ருவாண்டா உறுப்பினரானது...
டிரினிடாட் கூட்டத்தின்போது, ருவாண்டா நாட்டை உறுப்பினராக சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.
ருவாண்டா நாடு பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் இருந்த காலணி நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் உள்நாட்டுக் கலவரத்தில் சிக்கி சிதைந்த நாடு ருவாண்டா. தற்போதுதான் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
காமன்வெல்த்தில் சேர்க்கப்பட்டது குறித்து ருவாண்டா அமைச்சர் லூயிஸ் முஷ்கிவாபோ கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் ருவாண்டா நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாகவே காமன்வெல்த்தில் ருவாண்டா சேர்க்கப்பட்டிருப்பதாக கருதுகிறோம் என்றார்.
கடந்த 1994ம் ஆண்டு ருவாண்டாவில் மிகப் பெரிய இனக்கலவரம் மூண்டது. அதில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.