சக்கை போடு போடும் மாருதி, ஹூண்டாய் கார் விற்பனை
டெல்லி: சந்தை சரிவு, சர்வதேச நெருக்கடி, வேலையின்மை என்று புலம்பல்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், கார் விற்பனை இந்தியாவில் சக்கைபோடு போடுகிறது.
கடந்த நவம்பர் 30ம் தேதியோடு முடிந்த காலாண்டில் இதுவரை இல்லாத உச்சகட்ட அளவைத் தொட்டுள்ளது கார் விற்பனை.
மாருதி சுசுகியின் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரை விட இந்த நவம்பர் மாதம் 84 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது 87807 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸின் விற்பனை 28 சதவிகிதம் உயர்ந்து 55265 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் கார்கள் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்நாட்டில் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு சந்தையில் சிறிய ரக மாருதி கார்களான வேகன் ஆர், ஆல்டோ, ஜென் போன்றவற்றின் விற்பனை 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் மாருதியின் புதிய வாடிக்கையாளர்களாகியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டில் இந்த விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என்று நம்புவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.