மே 16க்குள் நடக்கும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை செல்லாது!
சென்னை: மெட்ரிக் பள்ளிகளில் மே 16ம் தேதி்க்கு முன்னதாக 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. மீறி நடத்தப்படும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று மெட்ரிககுலேஷன் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையே நடைபெறுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், ஏராளமான பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. இதன் மூலம் அதிக அளவில் பணமும் வசூலிக்கப்படுகிறது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி முதல் கட்டத்திலும், சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது என மற்றொரு கட்டத்திலும் கூறி, மறைமுக பேரத்தின் மூலம் பள்ளிகள் பணம் வசூல் செய்துவருகின்றன. இந்நிலையில், பிளஸ்1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும் மெட்ரிகுலேஷன் இயக்குனர் கெடு விதித்து எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், பல பள்ளிகளில் மாணவர்களின் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து, மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பிளஸ்1 மாணவர் சேர்க்கையை முடித்துவிடுவதாக புகார்கள் வருகின்றன.
பிளஸ்1 மாணவர் சேர்க்கையை 10ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி 15 நாட்களுக்குள் தான் முடிக்க வேண்டும். மே 16ம் தேதிக்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும். தவிர, மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் நேர்காணல் எதையும் நடத்தக் கூடாது.
10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களையும் 11ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 871 உயர்நிலைப்பள்ளிகள்:
தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 871 புதிய உயர்நிலைப் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த புதிய பள்ளிகள் துவக்க மொத்த தொகையான ரூ.652 கோடியில், ரூ.489 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பள்ளிகள் என்பது கல்வியறிவு விகிதப்படி கணக்கிட்டு விரைவில் அறிவிக்கப்படும். புதிய பள்ளிகளுக்காக சுமார் 1.27 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள 20 ஆயிரம் பள்ளிகளில் நூலகம் மற்றும் ஆய்வுக் கூடங்கள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.