நான் வீரப்பனை விரும்பி மணக்கவில்லை-முத்துலட்சுமி திடீர் தகவல்

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீது கர்நாடக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். போலீஸ் எஸ்.பி.ஹரிகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கும் இதில் உள்ளன.
நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தொடர்பாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து மைசூர் சிறையில் அடைத்து உள்ளனர். ஒரு வருடமாக அவர் ஜெயிலில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவரை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நான் வீரப்பனை விரும்பி திருமணம் செய்யவில்லை. எனக்கு 15 வயது இருந்தபோது என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெற்றோரிடம் பெண் கேட்டார். பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி என்னை வீட்டில் இருந்து கடத்தி சென்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் முன்பே நான் 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தேன்.
நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனாலும் ஜெயிலில் இருக்கிறேன். என் கணவர் செய்த குற்றத்துக்காக நான் ஏன் வழக்கை சந்திக்க வேண்டும்? தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.
எனது குழந்தைகளுக்கு தந்தையும் இல்லை. தாய் ஆதரவும் இல்லாமல் அனாதையாக்கப்பட்டு உள்ளனர். எந்த தவறும் செய்யாமல் அவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று தெரியவில்லை.
1991-ம் ஆண்டுக்கு பிறகு நான் என் கணவருடன் இருந்ததே இல்லை. அவர் இறந்த குற்றத்துக்காக என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
என் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவை கேட்டுக் கொள்கிறேன். எனது பிரச்சினை தொடர்பாக நான் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடமும் முறையிடப் போகிறேன் என்றார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமி இப்படி திடீரென கூறியிருப்பது அவருக்காக பேசி வந்த வீரப்பனின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications