இரண்டாவது காலாண்டில் அசத்தலான பொருளாதார வளர்ச்சி!

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் (ஜி.டி.பி.) 7.7 சதவீதமாக இருந்தது.
ஆனால் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.2 ஆக இருந்தது. எனவே இந்த ஆண்டு 6.4 சதவிகிதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் கூறியிருந்தனர். ஆனால் அந்தக் கணிப்பைப் பொய்யாக்கும் விதத்தில் அபாரமான வளர்ச்சியை இந்த காலாண்டில் பெற்றுள்ளது இந்திய பொருளாதாரம்.
இந்த பருவத்திற்கான (ஜி.டி.பி.) சதவீதம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த புள்ளி விவரப்படி, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் இந்தப் பருவத்தில் பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அரசு அறிவித்துள்ள பல்வேறு நிதிச் சலுகைகள்தான்.
இந்தக் காலாண்டின் வளர்ச்சி அமோகமாக இருந்தாலும் ஒட்டுமொத்த ஆண்டுக்கும் பார்க்கும்போது, 7 சதவிகித அளவைத் தாண்டுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றார், இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
"ஆனால் இது அபாரமான வளர்ச்சிதான். ஆனாலும் இப்போது நம் முன் உள்ள பல சவால்களை நாம் முறியடிக்க வேண்டியுள்ளது. விவசாயத்துறையில் குறைந்தளவு உற்பத்திதான் இன்னும் நமக்கு கிடைத்துக் கொண்டுள்ளது.
சொல்லப் போனால் விவசாய உற்பத்தி இது வரை இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. இதிலிருந்து விவசாயம் மேம்பட வேண்டும். விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் வந்தாலே கணிசமான வளர்ச்சியைக் காணமுடியும்", என்கிறார் பிரபல பொருளியல் நிபுணர் சோனல் வர்மா.
இந்த ஆண்டு பருவமழை வேறு வழக்கத்தை விட 23 சதவிகிதம் குறைவு என்பதால், விவசாயத்துறையில் உற்பத்தியை அதிகரிப்பது கடினம்தான்.
அரசு வைத்திருக்கும் மாற்றுத் திட்டம் என்ன என்பது அறிவிக்கப்பட்டால்தான் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி கணிக்க முடியும் என்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications