புஷ் மீது ஷூ வீசிய நிருபர் முன்டாசர் மீது பாரீஸில் ஷூ வீச்சு

செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார். பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவத்தால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்ட முன்டாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்துதான் நான் புஷ் மீது ஷூ வீசினேன்.
ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டவே இவ்வாறு செய்தேன். எனது சக நாட்டவர் மீது நான் ஷூ வீசவில்லை.
இந்த ஆக்கிரமிப்பை என்னால் தடுக்க முடியாது என எனக்கு தெரியும். அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போது எனது டெக்னிக்கையும் அவர்கள் களவாடியுள்ளனர் என்றார் சிரித்தபடி.
ஜெய்தி மீது ஷூ வீசிய ஈராக்கிய பத்திரிக்கையாளரின் பெயர் ஷெய்ப் அல் கயத் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த புராணத்தைப் பாடிக் கொண்டிருந்ததால் ஜெய்தி மீது எனக்குக் கோபம் வந்தது. இதனால்தான் எனது ஷூவைக் கழற்றி வீசினேன் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஜெய்தியின் செயலால், அரபு மக்களுக்கும், ஈராக்கிய பத்திரிக்கையாளர்களுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டது. ஒரு பத்திரிக்கையாளர் செய்யும் செயல் அல்ல ஜெய்தி செய்தது என்றார் கயத்.
புஷ் மீது ஷூ வீசி கைதான ஜெய்தி கடந்த செப்டம்பரில் விடுதலையானார். அவருக்கு முதலில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது நன்னடத்தை காரணமாக விரைவிலேயே விடுவிக்கப்பட்டு விட்டார்.
கடந்த ஆண்டு தனது பதவிக்காலத்தின் இறுதியில், புஷ், பாக்தாத் வந்தபோது செய்தியாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஜெய்தி எழுந்து, நாயே, இதுதான் உனக்கு ஈராக்கிய மக்கள் சார்பில் நான் தரும் பிரியாவிடை பரிசு என்று ஆவேசமாக கத்தியபடி ஒரு ஷூவை வீசினார். ஆனால் புஷ் லாவகமாக குணிந்து தப்பினார்.
பின்னர் தனது அடுத்த ஷூவை எடுத்துக் கொண்டு, ஈராக்கிய விதவைகளும், அனாதையாக்கப்பட்ட சிறார்களும் உனக்குத் தரும் பரிசு இது என்று கூறியபடி அதையும் வீசினார். அதிலிருந்தும் புஷ் தப்பினார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் ஜெய்தியின் ஸ்டைல சக ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவரைக் கடைப்பிடித்து ஜெய்தி மீது ஷூ வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் புஷ் மீது ஷூ வீசியதால் அரபு மக்களிடையே ஹீரோவாக உருவெடுத்தார் ஜெய்தி. ஆனால் நிச்சயம் கயத்துக்கு அந்த வரவேற்பு கிடைக்காது, மாறாக ஏராளமான வசவுகளை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications