போபால்: 25 ஆண்டுகள் கழிந்தும் மறையாத சோகம்
போபால்: போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முடிந்து 3ம் தேதி பிறக்கும் சமயத்தில், யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து மிதைல் ஐசோ சயனைட் என்ற நச்சு வாயு வெளியானதால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்தனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவ்விபத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் இன்றும் எண்ணி்க்கை கூடிக் கொண்டிருக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் வம்சமே தண்டனையை அனுபவி்த்து வருகிறது.
விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது.
ஆனால், ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
உச்சநீதிமன்ற தலையீட்டால், யூனியன் கார்பைடு நிறுவனம் நஷ்ட ஈடாக தந்த ரூ.715 கோடியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு அடங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இன்றளவும் குளறுபடிகள், ஊழல் புகார்கள் இருந்துவருகின்றன.
எனினும், இன்று நாடாளுமன்றத்தில் போபால் சம்பவத்துக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது. நிவாரணம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படு்ம் என பிரதமர் மன்மோகன் ஏற்கனவே அறிக்கை வெளியி்ட்டுவிட்டார்.