திருப்பதி: 'காணிக்கைகள் பாதுகாப்பாக இல்லை'
ஆந்திர மாநிலத்தில் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள தனி கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சார்பில் திருப்பதி கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டது. இது பற்றி கமிட்டி தலைவர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக ஏராளமான நகைகளை வழங்குகின்றனர். இந்த நகைகளின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. நகைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
உண்டியலில் தினமும் காணிக்கையாக சேரும் நகைகளை மும்பைக்கு அனுப்பி உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற வேண்டும். நகைகளில் உள்ள விலை மதிப்புமிக்க நவரத்தின கற்களை கோவில் பொக்கிஷ அறையில் தனியாக சேகரித்து பாதுகாக்க வேண்டும்.
திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகிறார்கள். மிகச்சிறிய கோவில்களில் கூட வாரம் ஒன்றுக்கு தலைமுடி விற்பனை மூலம் ரூ.3 கோடி ஈட்டுகிறார்கள். ஆனால் திருப்பதியில் தலைமுடி விற்பனை வருவாய் குறைவாக உள்ளது.
ஆண்டு தோறும் திருப்பதியில் சராசரியாக ஒரு கோடி பேர் தலைமுடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். ஆனால் இந்த தலைமுடி விற்பனை வருவாய் 60 கோடி ரூபாயாகத்தான் உள்ளது. இதுகுறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.