ஊழல் தடுப்பு பிரிவு பெண் எஸ்பி மீது ஊழல்கள்!
சென்னை: ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. லட்சுமி மீதுள்ள ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜ்மோகன் சந்திரா. இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுகுமார் ஜெபசிங் என்பவர், ஒரு அறக்கட்டளை மூலம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இலவசமாக வீடு கட்டிக்கொடுப்பதாக கூறினார். இதற்காக விண்ணப்பம் செய்தவர்களிடம் பல லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக பொதுமக்கள் புகார் கூறினார்கள்.
இதுபற்றி அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக இருந்த லட்சுமியிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் முறைகேடாக நடந்து கொண்டதால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை.
தற்போது லட்சுமி எஸ்.பி.யாக உள்ளார். அவர் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. எனவே லட்சுமி மீது துறை வாரியாக நடவடிக்கை எடுத்து கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுகுணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட அவர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி, எஸ்.பி. லட்சுமி ஆகியோர், 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.