திமுகவை ஆதரிப்பது ஏன்?- சரத் விளக்கம்
சென்னை: இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது எனது முடிவு அல்ல. கட்சியின் விருப்பம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தல் தனக்கு திருப்பத்தைக் கொடுக்கும் எனக் கூறி வேட்பாளரை நிறுத்தி படுதோல்வி அடைந்த சரத்குமார், தற்போது, திருச்செந்தூர்-வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவி்த்துள்ளார்.
அவர் கூறுகையில், திருமங்கலம் இடைத்தேர்தலில் நான் எடுத்த முடிவு வேறு, கட்சியில் பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவு வேறு. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் விருப்பம் வேறு, எனது முடிவு வேறு.
அடுத்த ஆண்டுகூட பொதுத் தேர்தல் வரலாம். எனவே, இந்த இடைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டனர்.
அதனால், கட்சியின் நிர்வாகக் குழு, உயர்மட்டக் குழு எடுக்கும் முடிவின்படி நடப்பது என்று நான் முடிவு செய்தேன். பெரும்பாலானவர்களின் முடிவுப்படி, இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தோம்.
தமிழக அரசின் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டிவி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவை மக்களை நன்றாக சென்றடைந்துள்ளதால், நான் பிரசாரத்திற்கு சென்று தான் திமுக வெற்றி பெறும் நிலை இல்லை என்றார்.