உடல் நலம் பாதிப்பு: ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட ராவ்-அமைச்சர் சமரசம்
ஹைதராபாத்: சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் கடும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பதால் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது.
பல பகுதிகளில் பஸ்கள், ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. ரேணுகா செளத்ரியின் வீடும் தாக்கி எரிக்கப்பட்டது.
போராட்டத்தை நடத்தி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சிறையிலும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். ராவ். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் கொண்ட ராவின் உடல் நிலை மோசமானது.
கடும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையிலும் அவர் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். 104 டிகிரி காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி குளுக்கோஸ் ஏற்றினர். ஆனால், மருந்து, மாத்திரை எதையும் சாப்பிட ராவ் மறுத்துவிட்டார்.
இந் நிலையில் கம்மம் அரசு மருத்துவமனையில் சந்திரசேகர ராவுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், வாரங்கல் அல்லது ஹைதராபாத் சிறைச்சாலைக்கு அவரை மாற்ற வேண்டும் என்று, அவருடைய குடும்பத்தினர் மனித உரிமை ஆணைய நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு புகார் செய்தனர்.
அதன்பேரில், சந்திரசேகரராவை உடனடியாக ஹைதராபாத் செஞ்சல்குடா சிறைச்சாலைக்கு மாற்றும்படி, ஆந்திர மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு நீதிபதி சுதர்சன் ரெட்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை கம்மம் அரசு மருத்துவமனையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் கொண்டு வந்து உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அமைச்சர் சந்திப்பு...
முன்னதாக ஆந்திர மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆர்.வெங்கட ரெட்டி, சந்திரசேகர ராவை கம்மம் மருத்துவமனையில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆந்திர மாநில அரசின் தூதராக அவர் ராவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரெட்டி கூறுகையில், முதல்வர் மற்றும் அமைச்சரவையின் சார்பி்ல தூதராக நான் வந்திருக்கிறேன். அவருடன் நான் பேசினேன். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
அவரது உடல் நலம் நன்றாக உள்ளது. அவரைப் பார்த்துக் கொள்வதற்காக மேலும் பல டாக்டர்களையும், பிற வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது என்றார்.
10 மாவட்டங்களில் பதற்றம்:
சந்திரசேகர ராவின் உடல்நிலை மோசமாவகு குறித்த தகவலை அறிந்து, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா பகுதியில் உள்ள கம்மம், மெகபூப் நகர், ஹைதராபாத், கரீம் நகர் உட்பட 10 மாவட்டங்களில் கடும் பதற்றம் நிலவுகிறது.
ஆந்திராவில் இந்த போராட்டத்திற்கு பாஜகவும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications