சிதம்பரம் வாலிபர் பக்ரைனில் படுகொலை- உடலை மீட்க எம்.பி கடிதம்
சிதம்பரம்: பக்ரைன் நாட்டில் கொலை செய்யப்பட்ட சிதம்பரம் வாலிபரின் உடலைக் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உள்துறைச் செயலாளருக்கு கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி கடிதம் அனுப்பியுள்ளார்.
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கத்தின் மகன் ராஜ்மோகன் (25). கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்ரைன் நாட்டில் மொராக் நகரத்தில் தினக்கூலியாக வேலைசெய்து வந்தார்.
பக்ரைன் நாட்டில் தமிழர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் ராஜ்மோகனை கடந்த வாரம் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ராஜ்மோகன் எங்கு, எந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைக்காததால், அவரின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் அவரின் உடலையாவது மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர உதவுமாறு ராஜ்மோகனின் உறவினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.
இதன்பேரில் ராஜ்மோகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு மத்திய உள்துறைச் செயலாளருக்கு கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி கடிதம் அனுப்பியுள்ளார்.